செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

தூய காற்று செயல்திட்டத்தை தொடங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமிக்கு, அன்புமணி ராமதாஸ் கடிதம்

Published On 2020-09-06 04:32 GMT   |   Update On 2020-09-06 04:32 GMT
தமிழ்நாடு அரசே சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உடனடியாக உருவாக்கி, சென்னை மாநகர மக்களின் தூயக்காற்றுக்கான அடிப்படை மனித உரிமையை காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

உலகில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது. ஒரு கனமீட்டர் காற்றில் பி.எம். 2.5 நுண்துகள் மாசு 10 மைக்ரோகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 100 மடங்கு அதிகமாக உள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும்.

சென்னையில் மக்கள் சுவாசிக்கும் காற்று ஆபத்தாகவே உள்ளது. எனவே மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்காமல் தமிழ்நாடு அரசே சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உடனடியாக உருவாக்கி, சென்னை மாநகர மக்களின் தூயக்காற்றுக்கான அடிப்படை மனித உரிமையை காப்பாற்ற வேண்டும். செப்டம்பர் 7-ந்தேதி நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் என ஐ.நா. அவையால் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சராகிய தாங்கள் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News