செய்திகள்
கொரோனா பரிசோதனை

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை

Published On 2020-09-06 07:44 IST   |   Update On 2020-09-06 07:44:00 IST
புதுவையில் தொற்று பரவலை தடுக்க பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 32 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

மேலும் கிராமப்புறங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த துணை சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் துணை சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

புதுவை நகரப்பகுதியில் ரெயின்போ நகர், மடுவுபேட், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரிசோதனை நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பரிசோதனை நடந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள்.

வீடுகளில் இருந்தவர்களை அவர்கள் வெளியில் அழைத்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். இந்த பரிசோதனை காரணமாக இன்னும் ஒரு சில நாட்களுக்கு தொற்று பாதிப்பு உடையவர்கள் அதிக அளவில் கண்டறியப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

புதுச்சேரி அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்க 104 கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 3,980 நபர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதுவரை 2 சுற்று கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 3-வது சுற்று கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

Similar News