செய்திகள்
கொலை

சொத்து தகராறில் விவசாயி படுகொலை: மகன்-மருமகளுடன் வெறிச்செயலில் ஈடுபட்ட மனைவி

Published On 2020-07-21 08:57 IST   |   Update On 2020-07-21 08:57:00 IST
விக்கிரமங்கலம் அருகே சொத்து தகராறில் விவசாயியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த மனைவி, மகன், மருமகள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சுந்தரேசபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 90). விவசாயியான இவர், தெற்கு தெருவில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார். சாமிநாதனுக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி சிவபாக்கியம் இறந்துவிட்டார். அவருக்கு தனலட்சுமி (65) என்ற மகளும், தர்மராஜ் (60) என்ற மகனும் உள்ளனர். 2-வது மனைவி பஞ்சவர்ணம் (70). இவருக்கு தங்கமணி (48) என்ற மகன் உள்ளார்.

சாமிநாதன், தனது சொத்துகளை இரு மனைவிக்கும் பிறந்த மகன் மற்றும் மகள்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் முதல் மனைவியின் மகன் தர்மராஜிக்கும், 2-வது மனைவியின் மகன் தங்கமணிக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமிநாதன் தனது குடிசை வீட்டில் தனியே தூங்கிக்கொண்டு இருந்தார். நேற்று காலை சாமிநாதன் குடிசைக்கு அருகே வசிக்கும் தனலட்சுமி, சாமிநாதனை பார்க்க சென்றபோது, அவர் அரிவாளால் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சாமிநாதனின் 2-வது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி, மருமகள் சாந்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து, சொத்து பிரச்சனையில் சாமிநாதனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News