10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை வரவேற்கிறோம்- கே.எஸ்.அழகிரி
வாலாஜா:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாலாஜாவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக கொரோனா நிலவரம் குறித்து முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் கூறியது அவருடைய சொந்த கருத்து. இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்தது சரியானதல்ல.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் முழுமையான தோல்வியடைந்துள்ளது.
கேரளாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது வெளிநாட்டு விமான போக்குவரத்து ரத்து செய்து முழு ஊரடங்கை கடைபிடித்து இருந்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.
அதைவிடுத்து மார்ச் மாதத்தில் ஊரடங்கு செய்தது பலனளிக்கவில்லை.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்களில் முன்னேறியுள்ள நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
சீனாவில் பி.சி.ஆர் சோதனை கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் அறிவித்து இருந்தோம். இந்த நிலையில் இன்று தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வசந்தகுமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. அசேன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், ஒன்றிய தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.