செய்திகள்
கொரோனா வைரஸ்

அரியலூர் கூலித்தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Published On 2020-04-30 09:27 GMT   |   Update On 2020-04-30 09:27 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய அரியலூர் கூலித்தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 27-ந்தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு சளி, இருமல் இருந்தது. இதையடுத்து அவர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். சென்னையில் வைரசின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் முருகேசன் அங்கிருந்து வந்துள்ளதால் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகம் அடைந்த மருத்துவ குழு அவரது சளி, ரத்தம் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக திருவாரூரில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர் .

ஆய்வில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அதில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது முருகேசன் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் முருகேசன் வசித்த வீடு மற்றும் தெரு பகுதியில் கிருமி நாசினி தெளிப்பது மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முருகேசனுடன் நெருங்கிப் பழகியவர்கள், உறவினர்கள் யார்-யார்? என்றும் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளதுடன் அவர்களை தனிமைப்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News