செய்திகள்
ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர்.

சிறுத்தையை பிடிக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

Published On 2020-03-11 11:34 IST   |   Update On 2020-03-11 11:34:00 IST
தாளவாடி அருகே 4 மாதமாக போக்குகாட்டிவரும் சிறுத்தையை பிடிக்க ட்ரோன் கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலி, சிறுத்தை உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தை அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது.

அண்மையில் பீம்ராஜ்நகர், சூசைபுரம், தொட்டகாஜனூர் பகுதியில் சிறுத்தை தோட்டத்திற்குள் புகுந்து 10 ஆடுகளையும், 12 நாய்களையும் வேட்டையாடியது. சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை கண்காணித்து வந்தனார்.

பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கல்குவாரி, தோட்டத்தில் என இரண்டு இடங்களில் கூண்டு வைத்தனர். ஆனால் கடந்த 4 மாதமாக சிறுத்தைகூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.

இந்தநிலையில் மாவட்ட தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன் உத்தரவில் தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக கூறப்படும் கல்குவாரிகளில் ட்ரோன் கேமரா மூலம் 4 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் கூண்டு வைத்து உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கபடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News