செய்திகள்
கோப்பு படம்

மாணவர்களை டீ வாங்கி வர கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

Published On 2020-02-28 10:22 IST   |   Update On 2020-02-28 10:22:00 IST
பண்ருட்டி அருகே மாணவர்களை டீ வாங்கி வரும்படி கூறிய தலைமை ஆசிரியரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூங்குணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு பூங்குணம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சீனுவாசன் பணிபுரிந்து வந்தார். இவர் வகுப்பு நேரத்தில் மாணவர்களை கடைக்கு அனுப்பி டீ வாங்கி வருமாறு கூறுவார். அதன்படி சம்பவத்தன்றும் அவர் சில மாணவர்களை டீ வாங்கி வரும்படி கூறினார். மாணவர்கள் கடைக்கு சென்று டீ வாங்கி வருவதை யாரோ சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர்.

இந்த காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.

இதையடுத்து இந்த விவகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரோஸ் நிர்மலாவின் பார்வைக்கு சென்றது.

இது குறித்து உரிய விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். அதன்படி வட்டார கல்வி அதிகாரிகள், பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில் தலைமை ஆசிரியர் சீனுவாசன் மாணவர்களை அவ்வப்போது கடைக்கு அனுப்பி வைத்து டீ வாங்கி வர செய்தது உறுதியானது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையை மாவட்ட கல்வி அதிகாரி சுந்தரமூர்த்தியிடம் வட்டார கல்வி அதிகாரிகள் வழங்கினர். அதன் பேரில் தலைமை ஆசிரியர் சீனுவாசனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அதிகாரி சுந்தரமூர்த்தி உத்தரவிட்டார்.

Similar News