செய்திகள்
லால்பேட்டையில் இன்று 5-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

லால்பேட்டையில் முஸ்லிம்கள் 5-வது நாளாக தொடர் போராட்டம்

Published On 2020-02-25 06:15 GMT   |   Update On 2020-02-25 06:15 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் முஸ்லிம்கள் நடத்தி வரும் போராட்டம் 5-வது நாளாக நீடிக்கிறது.
ஸ்ரீமுஷ்ணம்:

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக்கோரி நாடுமுழுவதும் முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற கோரி கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பரங்கிபேட்டை, விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி போன்ற இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பரங்கிப்பேட்டை வாத்தியார்பள்ளி தெருவில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு சவ பெட்டியுடன் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை கடை வீதியில் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தை கடந்த 21-ந்தேதி தொடங்கினர். அங்கு இரவும் பகலும் தங்கியிருந்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று 5-வது நாளாக தொடர் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஏதும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News