செய்திகள்
ஈரோடு வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் குருநாதன்

சின்னத்திரை நடிகை என நினைத்து அரசியல் கட்சி பிரமுகருக்கு வரும் அழைப்புகள்

Published On 2020-02-24 13:22 IST   |   Update On 2020-02-24 13:22:00 IST
நடிகை பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி, அரசியல் கட்சி பிரமுகரின் செல்போன் நம்பரை இணைத்துள்ளதால் அவரை பல வாலிபர்கள் தொடர்புகொண்டு பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவை சேர்ந்தவர் குருநாதன். இவர் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

ஒரு டி.வி.யில் ஒளிபரப்பாகும் தொடரில் நடிக்கும் ஒரு நடிகை பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி, குருநாதனின் செல்போன் நம்பரை இணைத்துள்ளனர்.

இதனால் அந்த நடிகை என நினைத்து, இரவு நேரங்களில் பல வாலிபர்கள் இவரை தொடர்புகொண்டு பேசுகின்றனர். மேலும், ‘‘நீங்க அழகா இருக்கீங்க”, ‘‘உங்கள நேர்ல பாக்கணும்” போன்ற வார்த்தைகள் பேசியும், தகாத வார்த்தைகளைப் பேசியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இரவு நேரங்களில் செல்போனில் வரும் அழைப்புகளை எடுப்பதற்கு பயமாக இருக்கிறது என்கிறார் குருநாதன்.

இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த குருநாதன், ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் போலி முகநூல் கணக்கை முடக்கி, இவரது செல்போன் எண்ணை நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

செல்போன் அழைப்புகளால் இரவு தூக்கம் தொலைத்த சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன் திக்குமுக்காடி போயுள்ளார்.


Similar News