காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில் காதலனை பிடித்து போலீஸ் நிலையத்திலேயே போலீசார் திருமணம் செய்து வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருமணம் செய்ய மறுத்த காதலனை காதலியுடன் சேர்த்து வைத்த போலீசார்
பதிவு: பிப்ரவரி 20, 2020 21:17
திருமணம்
தாம்பரம்:
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா(வயது 23). இவரும், பொழிச்சலூர் 7-வது குறுக்கு தெரு, அகத்தீஸ்வரர் நகரைச்சேர்ந்த மெனுவேல் நேசா இனோச் என்ற வெங்கடேஷ் என்பவரும் ஒரு செல்போன் விற்பனை ஷோரூமில் வேலை செய்து வந்தனர்.
இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக தெரிகிறது. 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஜாலியாக பல்வேறு இடங்களுக்கு சுற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கவிதா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வெங்கடேசை வற்புறுத்தினார். அதற்கு அவர், தனக்கு கடன் உள்ளது. அதனால் இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என மறுத்துவிட்டார்.
இதனால் விரக்தி அடைந்த கவிதா, தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணத்துக்கு மறுக்கும் வெங்கடேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வெங்டேசை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை செய்தனர்.
அப்போது கவிதாவின் உறவினர்கள், போலீஸ் நிலையத்திலேயே அவர் கவிதாவின் கழுத்தில் தாலி கட்டவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸ் நிலையத்திலேயே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி போலீசார் மற்றும் கவிதாவின் உறவினர்கள் முன்னிலையில் கவிதாவின் கழுத்தில் வெங்கடேஷ் தாலி கட்டினார். போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த திருமண வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.