செய்திகள்
அலெக்சாண்டர்

மொடக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து 9-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2020-02-15 10:26 IST   |   Update On 2020-02-15 10:26:00 IST
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது50). கூலி தொழிலாளி. இவரது மனைவி அழகரசி. இவர்களது ஒரே மகன் அலெக்சாண்டர் (14). அவல்பூந்துறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

அலெக்சாண்டர் தன்னுடன் படிக்கும் சக மாணவர் ஒருவருக்கு பிறந்த நாள் என்பதால் பள்ளி முடிந்து நேற்று மாலை 5 மணி அளவில் நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது அலெக்சாண்டரின் சட்டையில் கேக் ஒட்டியது. அதை சுத்தம் செய்வதற்காக தோட்டத்தில் உள்ள கிணற்றில் அலெக்சாண்டர் மட்டும் இறங்கினார். குனிந்து சுத்தம் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் கூச்சல் போட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த சில இளைஞர்கள் கிணற்றில் குதித்து மாணவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதுகுறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மாணவனை தேடினர். சிறிது நேரத்திற்கு பிறகு அலெக்சாண்டர் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News