விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது.
இங்கு வந்து சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தங்களது கோரிக்கைளை துண்டு சீட்டில் எழுதி அங்கு உள்ள மரத்தில் கட்டுவார்கள். கோரிக்கை நிறைவேறியதும் மீண்டும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல அரசியல் கட்சி தலைவர்களும் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள்.
இன்று காலை மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் விருத்தாசலம் வந்தார். கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்ற அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
அப்போது தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். தொடர்ந்து 15 நிமிடங்கள் வழிபட்ட அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அவருடன் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்,ஏ. உள்பட பலர் வந்திருந்தனர்.