வேலூர் அமிர்தி பூங்காவில் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை கற்பழிக்க முயன்ற காதலன்
வேலூர்:
வேலூர் கோட்டை பூங்காவில் காதலுடன் இருந்த இளம்பெண்ணை கத்திமுனையில் 3 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தனர் .இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் இதேபோன்ற ஒரு சம்பவம் அமிர்தி காட்டில் அரங்கேறியுள்ளது.
வேலூரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவி அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரை காதலித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் மாணவியை அமிர்தி பூங்காவிற்கு அழைத்து சென்றார். இதுபற்றி அவரது நண்பர்கள் 3 பேருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
4 பேரும் சேர்ந்து மாணவியை கற்பழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாணவியை அவரது காதலன் அமிர்தி பூங்காவில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரது நண்பர்கள் 3 பேர் தயாராக இருந்தனர். அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர் . அவர்களிடம் இருந்து தப்பிக்க மாணவி போராடினார். இதில் அவரது ஆடைகள் கிழிந்தன. தொடர்ந்து மாணவி கூச்சலிட்டார். அப்போது அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்தார்.
மாணவியின் சத்தம் கேட்டு முதியவர் அருகே ஓடிச் சென்றார். அப்போது கும்பல் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த முதியவர் விறகு வெட்டும் அரிவாளை காண்பித்து வாலிபர்களை எச்சரிக்கை செய்தார். அவர்கள் முதியவரையும் தாக்க முயன்றனர்.
இதனால் ஆவேசம் அடைந்த முதியவர் அவர்களை வெட்டுவதற்காக துரத்தினார். மேலும் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்தார்.
காட்டுக்குள் இருக்கும் மலை கிராம மக்கள் தொடர்ந்து விசில் அடித்தால் ஆபத்து என அர்த்தம். விசில் சத்தம் கேட்ட மலைகிராம மக்கள் அந்த பகுதிக்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மாணவியை அவர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் ஒரு விறகு கட்டை பிடிபட்ட வாலிபரின் தலையில் தூக்கிவிட்டு அவரை மலை கிராமம் வரை சுமக்க செய்தனர் .மேலும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
செல்போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் காரில் சென்று மாணவியை மீட்டு சென்றனர். மேலும் வாலிபரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் காப்பாற்றிய முதியவர் யார் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
அமிர்தி பூங்காவில் பாதுகாப்பான இடங்களைத் தவிர காட்டுப்பகுதிக்குள் காதல் ஜோடியினர் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.