செய்திகள்
ஓட்டல் உரிமையாளர் கொலை

புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் ஓட்டல் உரிமையாளர் படுகொலை

Published On 2020-01-08 16:52 IST   |   Update On 2020-01-08 16:52:00 IST
புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் பயங்கரம் ஓட்டல் உரிமையாளர் படுகொலை கழுத்தை அறுத்து மர்ம நபர்கள் வெறிச்செயல்

ஆலங்குடி,:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா மகன் சுரேஷ் (வயது 35). இவர் அதே ஊரில் உள்ள கடைத்தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். சுரேசின் சகோதரர்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.

தினமும் காலையிலேயே தனது ஓட்டலுக்கு செல்லும் சுரேஷ் இரவில்தான் வீடு திரும்புவார். நேற்று காலை வழக்கம்போல் மனைவியிடம் கூறிவிட்டு ஓட்டலுக்கு சென்ற அவர் இரவில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

ஓட்டலில் இருந்து கிளம்பி நீண்ட நேரம் ஆகியும் கணவர் வீட்டுக்கு வராததால் பதட்டம் அடைந்த அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் சுரேஷ் போனை எடுக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவர் தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு கணவரை தேடிச்சென்றார்.

இந்தநிலையில் வீட்டின் அருகேயிருந்த கடலை பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் சுரேஷ் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்றுபார்த்த போது, சுரேசின் முகத்தில் வெட்டுக் காயங்களும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. அவருக்கு அருகிலேயே செல்போனும் கிடந்தது.

இதுகுறித்து உடனடியாக கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சுரேசை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேசின் மூத்த சகோதரர் முருகேசின் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக இதே ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News