காவலன் செயலி மூலம் பெண்கள் அச்சமின்றி தனியாக சென்று வரலாம்- போலீசார் விளக்கம்
சித்தோடு:
சித்தோடு அம்மன் கலை அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் காவலன் செயலி குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கல்லூரி தாளாளர் டி.ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் டி.பாலகுமார் முன்னிலை வகித்தார். சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டு காவலன் செயலி குறித்து விளக்கி கூறினர். முன்னதாக பேராசிரியை அனிதா வரவேற்றார்.
காவலன் செயலியை தங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பெண்களின் அவசர காலத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் போலீசார் மற்றும் உறவினர்களை உடனடியாக தொடர்பு கொள்ள உதவும்.
செயலியால் பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பாக இருக்க முடியும். பெண்கள் எந்த நேரத்திலும் எங்கும் தனியாக அச்சமின்றி சென்று வர முடியும். இந்த செயலியை அவசர கால உதவிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர்.
முடிவில் கல்லூரி முதல்வர் ராஜேஷ் நன்றி கூறினார். துணை முதல்வர் செந்தில்குமார், பேராசிரியை பியூலா, சுவர்ணபிரியா மற்றும் பேராசிரியைகள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.