காதல் கணவர் கைவிட்டதால் கர்ப்பிணி பெண் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி
கூடலூர்:
கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்தில் நின்று அழுதுகொண்டு இருந்த இளம்பெண் ஒருவர் முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அப்பகுதி மக்கள் ஓடிவந்து பிடித்தனர். விசாரணையில் இவர் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த பிரியங்கா (வயது 20) என தெரியவந்தது.
வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பூவரசன் (வயது 25) என்பவரை காதலித்து 7 மாதத்திற்கு முன் திருமணம் செய்ததாகவும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், கடந்த 10 நாட்களாக தனது கணவரை காணவில்லை எனவும் அப்பெண் தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்து நான் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய வந்தேன் என்றார். உடனடியாக அப்பகுதி மக்கள் அந்தப்பெண்ணை லோயர்கேம்ப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண் இமைக்கும் நேரத்தில் முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.