செய்திகள்
செங்கல் சூளையில் இருந்து மீட்கப்பட்டவர்கள்

செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணிபுரிந்த 20 பேர் மீட்பு

Published On 2019-12-20 13:05 IST   |   Update On 2019-12-20 13:05:00 IST
அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணிபுரிந்த 20 பேரை வருவாய் துறையினர் மற்றும் போலீசார் இன்று மீட்டனர்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள முனியப்பம்பாளையம் பகுதியில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வந்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதில் 11 பெரியவர்கள், 9 குழந்தைகள் என 20 பேர் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினார்கள். ஆனால் சூளைக்காரர் அந்த குடும்பத்தினரை ஊருக்கு செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த குடும்பத்தினர் கடலூரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கோபி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து இன்று காலை கோபி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் செங்கல் சூளைக்கு சென்று கொத்தடிமையாக வேலை பார்த்த 20 பேரையும் மீட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அந்தியூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


Similar News