செய்திகள்
பொங்கல் பரிசு

ஈரோடு மாவட்டத்தில் 6 3/4 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு

Published On 2019-12-18 15:34 IST   |   Update On 2019-12-18 15:56:00 IST
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகளுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளன.
சூரம்பட்டி:

பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு வருடமும் ரே‌ஷன் கடைகளில் அரிசி கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதை விட இந்த ஆண்டு அதை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்கள் அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறி உள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன இவர்களுக்கும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுகளுக்கும் தலா ரூ.1000 மற்றும் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, பாசிப்பருப்பு போன்ற பொருட்களும் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பொங்கல் பரிசு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவு வந்தவுடன் 20-ந் தேதிக்கு பிறகு இது வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கரும்பு மற்றும் பொருட்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்படும்.

பொங்கல் பரிசு வழங்கப்படும்போது ரே‌ஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் வீதி வாரியாக எந்தந்த ரே‌ஷன் கார்டுகளுக்கு எந்த தேதியில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று ரே‌ஷன் கடைகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும்.

இதை தெரிந்து பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு உரிய பொங்கல் பரிசுகளை வாங்கிக் கொள்ளலாம். அரிசி கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News