செய்திகள்
நளினி

10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் நளினி

Published On 2019-12-07 06:54 GMT   |   Update On 2019-12-07 06:54 GMT
வேலூர் பெண்கள் சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி இன்று வாபஸ் பெற்றார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஜெயிலிலும், அவருடைய மனைவி பெண்கள் ஜெயிலிலும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

முருகனின் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதாக அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். ஜெயில் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் முருகன் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.



அதைத்தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் தங்களை கர்நாடகா அல்லது வேறு மாநிலத்தில் உள்ள ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்று நளினி கோரிக்கை விடுத்தார்.

மேலும் தங்களுக்கு விடுதலை கிடைக்காததால் கருணைக்கொலை செய்யக்கோரியும் கடந்த மாதம் 28-ந்தேதி நளினி மனு கொடுத்தார்.

அன்று முதல் தொடர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் 10-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். முருகன் 8-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

தொடர் உண்ணாவிரதம் காரணமாக இருவரின் உடல் நிலையும் மோசமானது. இதனால் அவர்களுடைய உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றினர். அதைத் தொடர்ந்து 3-வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

மேலும் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் 64 கிலோ எடை இருந்த முருகனின் உடல் எடை தற்போது 20 கிலோ குறைந்து 44 கிலோ இருப்பதாக அவருடைய வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி  இன்று வாபஸ் பெற்றார்.

ஆண்கள் சிறையில் இருந்த முருகன் கேட்டுக்கொண்டதை அடுத்து, நளினி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

Tags:    

Similar News