கடன் நெருக்கடியால் கூட்டுறவு சங்க இயக்குனர் மனைவியுடன் தற்கொலை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மோட்டாண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேதராசன் (வயது 58). இவர் அப்பகுதியில் உள்ள மணியன்தீவு கடல் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக இருந்தார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வேதராசன் சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் நெருக்கடியால் தொடர்ந்து வேதனை அடைந்தார்.
இதனால் நேற்று முன்தினம் இரவு வேதராசன், தனது மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை வரை கணவன்- மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் வீட்டுக்குள் சென்று பார்த்த போது இருவரும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.