செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

மதுராந்தகம் அருகே தலைமை ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை

Published On 2019-09-29 08:54 GMT   |   Update On 2019-09-29 08:54 GMT
மதுராந்தகம் அருகே தலைமை ஆசிரியை வீட்டில் 75 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் லூர்து டேவிட். தாம்பரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி அந்தோணி அம்மாள் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். நேற்று மாலை லூர்து டேவிட் வேலைக்காக சென்று விட்டார். இரவு அந்தோணி அம்மாள் தனது மகன், மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு அறையில் தூங்கினார்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 75 பவுன் நகை, வெள்ளி பொருட்களை அள்ளி தப்பிச்சென்று விட்டனர்.

அறையில் தூங்கிய அந்தோணி அம்மாளுக்கு வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரியவில்லை. அதிகாலை எழுந்த போது தான் கொள்ளையர்கள் நகையை எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News