அரியலூர் அருகே போலீஸ்காரர் மிரட்டியதால் பெண் தற்கொலை
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள காட்டுப்பெரும்பியம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சுமதி (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. 5 வயதில் ஹரிஹரன் என்ற மகன் உள்ளான்.
வேல்முருகன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். இதனால் சுமதி, தனது மகனுடன் கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த சுமதி திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று சுமதி இறந்தார்.
இது குறித்து சுமதியின் தாயார் இடையத்தான்குடியைச் சேர்ந்த தேன்மொழி கயர்லாபாத் போலீசில் புகார் செய்தார். புகாரில் அரியலூர் பேளூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் காமராஜ் என்பவர் டார்ச்சர் செய்ததால்தான் தனது மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர், போலீஸ்காரர் காமராஜ் டார்ச்சரால் சுமதி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சுமதி சாவுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. சுமதிக்கும், அரியலூர் மாவட்டம் பேளூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் காமராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் மூலம் காமராஜ், சுமதியிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். சுமதியும் காமராஜ் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுமதி, காமராஜூடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
கடந்த 3-ந்தேதி சுமதி வீட்டிற்கு சென்ற காமராஜ், அங்கிருந்த சுமதியிடம் செலவுக்கு பணம்-நகை, தாலிச் செயின் மற்றும் அவர் பயன்படுத்தி வந்த செல்போன் சிம்கார்டை கேட்டு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சுமதி எதையும் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காமராஜ், சுமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
காமராஜ் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த சுமதி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் காமராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.