பள்ளி அருகே குப்பை கழிவுகளை எரிப்பதை எதிர்த்து குழந்தைகளுடன் பெற்றோர் சாலை மறியல்
ஈரோடு:
ஈரோடு அடுத்த நசியனூரில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி அருகிலேயே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச் சந்தை வளாகத்தில் குப்பை கழிவுகளை பிராய்லர் மூலம் வைத்து எரித்து வந்துள்ளனர். இதனால் ஏற்படும் புகைபள்ளி வளாகத்திற்குள் சென்று பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மூச்சு விடுவதில் சிரமம் பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த பெற்றோர்கள் இந்தப் பகுதிகளில் குப்பைகளை எரிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நசியனூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .
மேலும் மனசின் ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் துரை மணியும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இந்த பகுதியில் குப்பை கழிவுகளை எரிப்பதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டினர் எனவே இந்த பகுதியில் குப்பைகளை எரிக்க கூடாது என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த செயல் அலுவலர் “தற்போது தற்காலிகமாக இந்தப் பகுதியில் குப்பைகளை எரிக்க விடமாட்டோம். இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்“ என்றார்.
இதனை ஏற்று பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 45 நிமிடம் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.