செய்திகள்
வேலூர் தொகுதி

வேலூர் தொகுதியில் இதுவரை 18 பேர் மனு தாக்கல்

Published On 2019-07-16 07:53 GMT   |   Update On 2019-07-16 08:05 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இதுவரை 18 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும்.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 7 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 2-ம் நாளில் சுயேட்சை கட்சியினர் மனுத்தாக்கல் செய்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று வேட்பு மனுத்தாக்கல் வழக்கம்போல் தொடங்கியது.

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நரேஷ்குமார் தனது ஆதரவாளர்களுடன் சைக்கிளில் வந்தார். ஆனால் சைக்கிளில் உள்ளே செல்ல அனுமதி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதையடுத்து வெளியில் இருந்து நடந்து வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் மனுத்தாக்கல் செய்தார்.

இதேபோல் முன்னாள் தாசில்தார் செல்வராஜ் சுயேட்சையாகவும், தேசிய மக்கள் கழகம் சார்பில் திவ்யாவும், இந்திய குடியரசு கட்சி (ஆர்.பி.ஐ.) சார்பில் ஆறுமுகமும், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பலராமனும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, முற்போக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் கணேசன் என மொத்தம் 6 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை 3 நாட்களில் மொத்தம் 18 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் நாளை மனுத்தாக்கல் செய்கிறார்.


Tags:    

Similar News