செய்திகள்

பெங்களூரில் இருந்து வேலூருக்கு கடத்திய ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல் - 5 பேர்சிக்கினர்

Published On 2019-05-03 12:19 IST   |   Update On 2019-05-03 12:19:00 IST
பெங்களூரில் இருந்து வேலூருக்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. #Gutkha

ஆம்பூர்:

வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து வேலூருக்கு குட்கா கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

ஆம்பூர் பெத்லகேம் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் டவுன் போலீசார் இன்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரும், லாரியும் சேர்ந்து வந்தன. அதன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் கார், லாரியை மடக்கி சோதனையிட்டனர். காரில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த வியாபாரிகள் 3 பேர் இருந்தனர். தொடர்ந்து லாரியில் சோதனையிட்டனர். அதில் அட்டை பெட்டிகளில் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சமாகும். லாரி டிரைவர் சேலத்தை சேர்ந்த சுரேஷ்குமார், கிளீனர் சரவணன் ஆகியாரிடம் விசாரித்தனர்.

அவர்களுடன் காரில் வந்த வேலூர் வியாபாரிகள் கவுஸ், பயாஸ், இப்ராகிம் ஆகியோர் பெங்களூரில் இருந்து வேலூருக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.லாரியுடன் குட்கா வியாபாரிகள் வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரில் இவர்களுக்கு குட்கா சப்ளை செய்தது யார்? அங்கிருந்து எங்கெல்லாம் குட்கா சப்ளை செய்யப்படுகிறது என்பது குறித்து 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Gutkha

Similar News