செய்திகள்

வேதாரண்யம் மீனவர்கள் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2019-04-04 06:39 GMT   |   Update On 2019-04-04 06:39 GMT
எல்லை தாண்டி மீன்பிடித்தததாக கூறி வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:

கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மீனவர்களின் படகுகள் உடைந்து சேதமாகின. இதனால் பெரும்பாலான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடந்த 4 மாதங்களாக முடங்கி கிடந்தனர். சில மீனவர்கள் சேதமான படகை சீரமைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் கோடியக் கரையில் தங்கி மீன்பிடித்து வந்தனர். சீசன் முடிந்ததால் பல மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

தற்போது கோடியக்கரையில் பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை ஆகிய இடங்களை சேர்ந்த மீனவர்கள் மட்டும் தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றனர்.

கோடியக்கரையில் இருந்து நேற்று 25 படகுகளில் 100 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் கோடியக்கரை மீனவர்களிடம் நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறீர்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்து அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மீன்பிடிக்காமல் இன்று காலை கரை திரும்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்பிடிக்காமல் மீனவர்கள் கரை திரும்பியதால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News