செய்திகள்

மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி- இல.கணேசன் பேச்சு

Published On 2019-03-27 10:42 GMT   |   Update On 2019-03-27 10:42 GMT
பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று அரியாங்குப்பத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் இல.கணேசன் பேசியுள்ளார். #pmmodi #ilaganesan

புதுச்சேரி:

பா.ஜனதா கட்சியின் அரியாங்குப்பம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. சிறைக்கு சென்றவர்கள், செல்லப்போகிறவர்கள் என இணைந்து கூட்டணி வைத்துள்ளனர்.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பாளரை கைது செய்ய முடியாது. தேர்தல் வரை அவர்கள் வெளியில் இருக்கலாம். எந்த மாகாணத்திலும் எதிர் கட்சியில் உள்ளவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. அப்படியே சேர்ந்தாலும் ராகுல்தான் பிரதமர் என யாரும் கூற வில்லை.

ஆனால், தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும் தான் ராகுல் காந்தி பிரதமர் என கூறுகிறார். விழிப்பாக இருந்து தப்பு செய்கிறவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். செல்லும் இடமெல்லால் மோடி, மோடி என்கின்றனர். மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார். #pmmodi #ilaganesan

Tags:    

Similar News