செய்திகள்

பிரசாரம் நிறைவுபெறும் அன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம்: தமிழக தேர்தல் அதிகாரி தகவல்

Published On 2019-03-23 10:36 GMT   |   Update On 2019-03-23 10:36 GMT
தேர்தல் பிரசாரம் நிறைவுபெறும் நாளான ஏப்ரல் 16-ந்தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LSPolls #SathyaPrathaSahoo #ElectionCampaign
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 21-ந்தேதி மட்டும் ரூ.5 கோடியே 21 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை மொத்தம் ரூ.19 கோடியே 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 18 ஆயிரத்து 980 கைத்துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சிவிஜில் செயலி மூலம் தமிழகத்தில் இதுவரை 657 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 77 ஆயிரத்து 977 அரசு கட்டிடங்களின் சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள், பிரசார விளம்பர தட்டிகள், பேனர்கள் அகற்றப்பட்டு 233 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் சுவர்களில் வரையப்பட்ட 1 லட்சத்து 43 ஆயிரத்து 930 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு 148 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட விளம்பரத்துக்கான செலவு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும்.

பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப் பணம் கொண்டு சென்றால் ஆவணங்கள் வைத்திருக்க தேவையில்லை. அதற்கு மேல் எடுத்துச்செல்லும் போது அந்த பணத்துக்கான ஆவணங்களான ஏடிஎம் சீட்டு, வங்கி காசோலை விவரம், வங்கியில் பணம் எடுத்ததற்கான விவரங்களை வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து ஏப்ரல் 16-ந் தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம். மதுரையில் மட்டும் அன்று இரவு 8 மணி வரை பிரசாரம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SathyaPrathaSahoo #ElectionCampaign
Tags:    

Similar News