செய்திகள்

திருப்பூரில் 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

Published On 2019-03-15 14:49 GMT   |   Update On 2019-03-15 14:49 GMT
திருப்பூரில் முதல் திருமணத்தை மறைத்து 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்:

திருப்பூரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய தாயார், மாணவியின் புத்தகப்பையை எடுத்து பார்த்தார். அப்போது பைக்குள் மஞ்சள் கயிறுடன் தாலி, மெட்டி இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகளிடம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது அந்த மாணவி, திருப்பூர் காலேஜ் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 22) என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தன்னை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று தாலி கட்டி திருமணம் செய்ததாகவும், அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் மனம் உடைந்த மாணவியின் தாயார், இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவி 9-ம் வகுப்பு கோடை விடுமுறையில் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு பணியாற்றிய தினேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தினேஷ், அந்த மாணவியை கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று அங்குள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்கு சென்று தனிமையில் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தினேசை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்து , தன்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தினேஷ் மீது புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், ஏட்டு வனஜா ஆகியோர் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News