மாம்பாக்கம் அருகே அலங்கார பொருள் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
திருப்போரூர்:
மாம்பாக்கத்தை அடுத்த கொளத்தூர், போரூர் பகுதியில் வீடு, ஓட்டல்கள், அலுவலகங்களில் உள்வேலைப் பாடுடன் கூடிய அலங்கார பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.
இங்கு 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கம்பெனியின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனை கண்ட காவலாளி இதுபற்றி கம்பெனியின் மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.
இதற்குள் தீ மளமளவென கம்பெனி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மறைமலைநகர், சிறுசேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இதில் கம்பெனியில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. சேதமதிப்பு சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மின் கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து காயார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டம் விசாரணை நடத்தி வருகின்றார்.