செய்திகள்

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மைதானத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2019-03-06 14:50 IST   |   Update On 2019-03-06 14:50:00 IST
காஞ்சிபுரம் அருகே கல்லூரி மைதானத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்,:

காஞ்சிபுரம் அடுத்த தாட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (வயது30).

இவர் நேற்று இரவு காஞ்சிபுரம் அருகே பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த மர்ம கும்பல் அவ்வழியே சென்றவர்களை மிரட்டி தாக்கினர்.

இதனை மதுசூதனன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மதுசூதனை சரமாரியா வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மதுசூதனனை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மதுசூதனனை வெட்டி கொலை செய்தவர்கள் தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

மைதானத்தில் மது அருந்தும் வாலிபர்கள் அவ்வழியே செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரவு நேரங்களில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News