செய்திகள்

ஒரத்தநாடு அருகே பின்னையூரில் வீடு புகுந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளை

Published On 2019-03-02 07:57 GMT   |   Update On 2019-03-02 07:57 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் வீடு புகுந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமம் கீழக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 35). இவர் தனது சகோதரர் கவுதமன், தாயார் ஜெயம் ஆகியோருடன் வசித்து வருகிறார். ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்டில் விஜய் அரிசி கடை வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் விஜய், கவுதமன் மாடியிலும், தாயார் ஜெயம் வீட்டின் வராண்டாவிலும் படுத்து தூங்கி உள்ளனர். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்து வீட்டில் பின்பக்க கதவை உடைத்து மர்ம கும்பல் உள்ளே புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் காப்பர் ஒயர்கள் திருடி சென்று விட்டனர். அவர்கள் அதே பகுதியில் பால்ராஜ் என்பவரது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் விஜய் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சமீபகாலமாக ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் வீடுகள் மற்றும் கோவில் உண்டியல்களை உடைத்தும் மர்மநபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் கூடுதல் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News