செய்திகள்
கடலூரில் அற்புதம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது எடுத்த படம்.

பேரறிவாளன் உள்பட 7 பேரை கவர்னர் விடுதலை செய்யவேண்டும்- அற்புதம்மாள்

Published On 2019-02-25 06:16 GMT   |   Update On 2019-02-25 06:16 GMT
தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். #Arputhammal
கடலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன்படி நேற்று கடலூருக்கு வந்த அற்புதம்மாள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்கள் ஆகியும் கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார்.

இது தொடர்பாக ஏற்கனவே கவர்னரை சந்தித்து வலியுறுத்திய நிலையில் மீண்டும் அவரை சந்திக்க சட்டத்தில் இடமில்லையாம். எனவே மக்களை சந்திக்க முடிவெடுத்து இதுவரை 16 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். எனது 71 வயதிலும் சட்டத்தின் வழிகாட்டுதலின்படியே போராட்டம் நடத்தி வருகிறேன்.

அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மும்பை குண்டு வெடிப்பில் 254 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான பிரபல நடிகர் 5 ஆண்டுகளில் வெளியே வந்தார். சி.பி.ஐ. விசாரித்த அந்த வழக்கில் அந்த மாநில கவர்னரே அவரை விடுதலை செய்தார்.

ஆனால், தமிழகத்துக்கு மட்டும் வேறு ஒரு சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே பேரறிவாளன் உள்பட 7 பேரின் சட்டப் படியான விடுதலையை எதிர்நோக்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Arputhammal

Tags:    

Similar News