திண்டுக்கல் அருகே மனைவியை கொன்ற கணவன் கைது
வேடசந்தூர்:
வேடசந்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிவனேசன் (வயது 45). இவருக்கும் விருதுநகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் உமா தேவி (வயது 40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கூலித் தொழிலாளியான சிவனேசன் அடிக்கடி வேலை விஷயமாக பல ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். நேற்று உமா தேவி வீட்டின் மாடி பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது மனைவிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் அதனால் இறந்து விட்டதாக சிவனேசன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் போலீசார் விசாரணையில் சிவனேசன் முன்ணுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார். எனவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தனது மனைவியை அடித்துக் கொன்றதை சிவனேசன் ஒப்புக் கொண்டார்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று கோபமடைந்த சிவனேசன் உமா தேவியை அடித்து தாக்கியுள்ளார். மேலும் படியில் இருந்து விழுந்த அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சிவனேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.