செய்திகள்

திருப்போரூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி பலி

Published On 2019-02-18 11:25 GMT   |   Update On 2019-02-18 11:25 GMT
திருப்போரூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன், மனைவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்போரூர்:

திருப்போரூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 72). இவரது மனைவி கஸ்தூரி பாய் (65). இவர்களுடைய ஒரே மகள் திருமணமாகி கணவருடன் விருதுநகரில் வசித்து வருகிறார்.

ஆனந்தராஜும், அவரது மனைவியும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் சிறிய பெட்டிக் கடை நடத்தி வந்தனர்.

நேற்று இரவு கடையை மூடி விட்டு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் தீப்பிடித்தது.

மேலும் கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஆனந்தராஜ், அவரது மனைவி கஸ்தூரி பாய் ஆகியோர் உடல் துண்டாகியும், கருகியும் பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் மறைமலைநகர், சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் குடிசை முழுவதும் இடிந்து தரை மட்டமானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. மின் கசிவினால் ஏற்பட்ட தீயில் கியாஸ் சிலிண்டர் வெடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

2 பேரின் உடலையும் காயார் போலீஸ் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News