செய்திகள்

சேலத்தில் 5 ரூபாய் நோட்டை வாங்க வியாபாரிகள் மறுப்பு - பொதுமக்கள் அதிருப்தி

Published On 2019-02-16 05:57 GMT   |   Update On 2019-02-16 05:57 GMT
சேலத்தில் 5 ரூபாய் நோட்டை வாங்க வியாபாரிகள் மறுப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்குவது கிடையாது.

தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் சேலம் - நாமக்கல் மாவட்டங்கள் உள்பட சில பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற முடிவுக்கு வியாபாரிகள் வந்துவிட்டனர். இதனால் பொதுமக்களும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதும் கிடையாது, கொடுப்பதும் கிடையாது.

தற்போது சேலத்தில் 5 ரூபாய் நோட்டுக்கும் சிக்கல் வந்துவிட்டது. இந்த ரூபாய் நோட்டை வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர்.

இதனால் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. 5 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பது ஏன்? என்று வியாபாரிகளிடம் கேள்வி கேட்டால் இந்த ரூபாய் செல்லாது, எனவே நாங்கள் வாங்க மாட்டோம் என்று கூறுகிறார்கள்.

இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெளியூரில் இருந்து சேலத்துக்கு வரும் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். எல்லா ஊரிலும் 10 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நோட்டு செல்லும்போது இங்கு மட்டும் ஏன் செல்லாது என்று அவர்கள் பஸ் கண்டக்டர் மற்றும் ஓட்டல்களில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். தினம் தினம் இந்த காட்சிகளை பார்க்க முடிகிறது.

இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, சேலத்துக்கு மட்டும் 10 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நோட்டை வாங்கக்கூடாது என்று தனி சட்டமா இருக்கிறது? யாரோ வி‌ஷமிகள் இதுபோன்ற செய்தியை பரப்பி பொதுமக்களை குழப்பி வருகின்றனர்.

இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை வியாபாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 10 ரூபாய் நாணயம் , 5 ரூபாய் நோட்டு செல்லாது என்று அரசு எதுவும் அறிவிக்கவில்லை. இதை வியாபாரிகள் வாங்க மறுப்பது கண்டனத்துக்குரியது.

இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News