செய்திகள்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிராக மாணவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Published On 2019-01-22 07:51 GMT   |   Update On 2019-01-22 07:51 GMT
ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு எதிராக மாணவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #JactoGeo #HighCourt
சென்னை:

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அரும்பாக்கத்தை சேர்ந்த கோகுல் என்ற மாணவன், தன் தந்தை மூலம் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மார்ச் மாதம் 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது.

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஏற்கனவே இந்த போராட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் வக்கீல் நவீன், மதுரை கிளையில், இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் வழக்கை விசாரித்து வருகிறது என்றார். ‘டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் விசாரிக்கும்போது, தனி நீதிபதியான நான் எப்படி விசாரிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாக கூறினார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பு வக்கீல், வழக்கை திரும்பப்பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #JactoGeo #HighCourt
Tags:    

Similar News