திருச்சியில் இன்று பட்டப்பகலில் பள்ளி மாணவனை மர்மநபர்கள் கடத்தி சென்றதால் பரபரப்பு
திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை புது தெருவை சேர்ந்தவர் குணா, ஆட்டோ டிரைவர். இவரது மகன் சுரேந்தர் (வயது 14). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை குணா, சுரேந்தரை பள்ளியில் விடுவதற்காக ஆட்டோவில் அழைத்து சென்றார். பள்ளி முன்பு சுரேந்தரை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சுரேந்தர் பள்ளிக்கு செல்லாமல் அவனது நண்பர் கோகுல் வீட்டிற்கு சென்றுள்ளான்.
நாச்சிக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே நடந்து செல்லும் போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சுரேந்தரின் வாயில் துணியை அமுக்கி உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலம் அருகே உள்ள தென்னை தோப்பிற்கு கடத்தி சென்றுள்ளனர்.
இதனிடையே அந்த வழியாக பொதுமக்கள் சிலர் வரவே, மர்மநபர்கள் அங்குள்ள புதர்பகுதியில் மறைந்து கொண்டனர். இதையடுத்து சுரேந்தர் சுதாரித்து செயல்பட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான். மேலும் தனது தந்தைக்கு போன் செய்து நடந்த விவரத்தை தெரிவித்துள்ளான். உடனே குணா அங்கு சென்று சுரேந்தரை மீட்டார்.
மேலும் இது குறித்து சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்மகும்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யார், எதற்காக சுரேந்தரை கடத்தினார்கள், குணாவின் எதிராளிகள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் பள்ளி மாணவனை மர்மநபர்கள் கடத்தி சென்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.