செய்திகள்

புதுவை அருகே பெண் கற்பழித்து கொலை- போலீசார் விசாரணை

Published On 2019-01-11 15:41 IST   |   Update On 2019-01-11 15:41:00 IST
புதுவை அருகே பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:

புதுவை கருவடிக் குப்பத்தில் இருந்து தமிழக பகுதியான கோட்டக்குப்பத்துக்கு செல்ல புறவழிச்சாலை உள்ளது. இந்த புறவழி சாலையில் ஏராளமான காலி மனைகள் உள்ளன.

இந்த காலி மனைகளில் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு எங்கும் குப்பை கிடங்காக உள்ளது.

இன்று காலை பன்றி மேய்ப்பவர்கள் அவ்வழியே சென்றனர். அப்போது குப்பை மேட்டில் பெரிய பாலித்தீன் கவரில் தலை மற்றும் உடல் சுற்றப்பட்டு கால்கள் மட்டும் வெளியே தொங்கிய நிலையில் மனித உடல் ஒன்று கிடந்ததை கண்டனர்.

இதுபற்றி அவர்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலிதீன் கவரை பிரித்து பார்த்தனர். அப்போது 50 வயது மதிக்கத்தக்க பெண் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததை கண்டனர். அந்த பெண்ணின் முகம், கை-கால்களில் ரத்த காயங்கள் இருந்தன.

அந்த பெண்ணை யாரோ மர்ம நபர்கள் கற்பழித்து கொலை செய்து உடலை காரில் கடத்தி வந்து குப்பைமேட்டில் வீசி இருக்கிறார்கள்.

அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊர்? என்பது குறித்தும், அவரை கொலை செய்து உடலை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார் சாவடியில் நேற்று முன்தினம் ஒரு பெண் மர்மமான முறையில் தீயில் எரிந்து பிணமாக கிடந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News