செய்திகள்

பசுபதிபாண்டியன் நினைவு தினம் - தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை 144 தடை உத்தரவு

Published On 2019-01-08 14:59 GMT   |   Update On 2019-01-08 14:59 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை முதல் 11-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை முதல் 11-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தாலுகா அலங்காரத்தட்டு பகுதியில் நாளைமறுநாள்(வியாழக்கிழமை) தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதிபாண்டியன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 11-ந்தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் பொதுமக்கள் 5-க்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், கட்சி மற்றும் சமுதாய கொடிகள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக விழாவிற்கு கலந்து கொள்ள பொது மக்களை அழைத்து வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள். தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. இந்த நிகழ்ச்சியினை அமைதியான முறையில் நடத்திட மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு உள்ள நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #tamilnews
Tags:    

Similar News