செய்திகள்

ரத்த வங்கிகளை கண்காணிக்க வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-01-04 13:31 IST   |   Update On 2019-01-04 13:31:00 IST
ரத்த வங்கிகளை கண்காணிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Bloodbanks #MaduraiHC
மதுரை:

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எய்ட்ஸ் பரவுவதைத் தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கழகத்துக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இப்பணிகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கழகம் சரியாக மேற்கொள்வதில்லை.

இப்போது சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை செலுத்தி உள்ளனர். ரத்த வங்கிகள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லை.

மருத்துவ துறையினரின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் கவனக்குறைவாலும் 2014 முதல் 2017 வரை பல லட்சம் யூனிட் ரத்தம் முறையாக பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2016 வரை நாடு முழுவதும் தவறாக ரத்தம் செலுத்தப்பட்டதால் 2,234 பேருக்கு எச்.ஐ.வி. பரவியுள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகளை கண்காணிக்கவும், ரத்தம் கொடுப்பவர்கள், பெறுவோரின் விவரங்களை பராமரிக்கவும், லாப நோக்கத்தில் செயல்படும் ரத்த வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்யவும், உரிய கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களை நீக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா, புகேழந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் கேட்டு உரிய தகவல் தெரிவிக்குமாறு அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #Bloodbanks #MaduraiHC

Tags:    

Similar News