செய்திகள்
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம்- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் அதிரடி ஆய்வு
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதின் எதிரொலியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் வினய் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது. இதுகுறித்து நடந்த விசாரணையில் தற்காலிக ஊழியர்கள் ரத்தத்தை ஆய்வு செய்யாமல் கவனக்குறைவால் அஜாக்கிரதையாக செயல்பட்டது தெரியவந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் வினய் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ரத்த மாதிரி, தேதி உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தார். மேலும் ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ள ரத்தமாதிரிகளை முறையாக சோதனை செய்யப்பட்டு எடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.