செய்திகள்
கைதான ராஜவேலு- கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரி

தமிழக அரசின் தங்ககாசை பெற்றோரிடம் கொடுத்ததால் மனைவியை கொன்றேன் - கைதான கணவர் வாக்குமூலம்

Published On 2018-12-26 06:02 GMT   |   Update On 2018-12-26 06:02 GMT
தமிழக அரசு கொடுத்த ஒரு பவுன் காசுக்காக ஏற்பட்ட பிரச்சனையில் கணவரே 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நங்கவள்ளி:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ராஜவேலு (வயது 22). தறி தொழிலாளி.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி திருமணம் நடந்தது. புவனேஸ்வரி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த 22-ந் தேதி காலை கணவர் வீட்டில் மர்மமான முறையில் புவனேஸ்வரி இறந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற உறவினர்களிடம் ராஜவேலு, புவனேஸ்வரி தற்கொலை செய்ததாக கூறினார். புவனேஸ்வரி உடலில் பல இடங்களில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராஜவேலுவை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது திருமண உதவி தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசால் வழங்கப்பட்ட தங்க காசை புவனேஸ்வரியின் தாய் சந்தியா கொண்டு சென்றதால் ஏற்பட்ட தகராறில் ராஜவேலு, புவனேஸ்வரியை கொன்று விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவர் தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது:-

திருமண உதவி தொகை திட்டத்தின் கீழ் புவனேஸ்வரிக்கு 50 ஆயிரம் ரொக்கப்பணமும், 1 பவுன் காசும் அரசு வழங்கியது. இதனை கடந்த 19-ந்தேதி எனது தந்தை சண்முகமும், மாமியார் சந்தியாவும் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வாங்கி வந்தனர்.

ஆனால் அந்த தங்ககாசை என்னிடம் தராமல் எனது மாமியார் கொண்டு சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அதனை வாங்கி வருமாறு எனது மனைவியை அனுப்பினேன். அப்போது தங்க காசை வாங்காமல் திரும்பி வந்தாள், ஏன் தங்க காசை வாங்கி வரவில்லை என கேட்டதற்கும் சரியான பதில் சொல்லவில்லை.

இதனால் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே கடந்த 22-ந் தேதி தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் அவரை அடித்ததுடன் பிடித்து கீழே தள்ளினேன். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பேச்சு மூச்சற்ற நிலையில் கிடந்தாள்.

பின்னர் அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவளது முகத்தில் வைத்து அமுக்கினேன். அப்போதும் உயிர் போகாததால் கழுத்தில் இருந்த தாலி கயிற்றோடு சேர்த்து இருக்கினேன். தாலி கயிறு அறுந்து விட்டதால் அருகில் கிடந்த கயிற்றை எடுத்து கழுத்தில் போட்டு மீண்டும் இறுக்கி கொன்றேன்.

பின்னர் உறவினர்களிடம் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாகவும், தற்போது அவரது உடலை கீழே இறக்கி வைத்ததாகவும் கூறினேன். ஆனால் தூக்கு போட்டதற்கானை அடையாளம் இல்லை என்றும், உடலில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகப்பட்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் போலீசாரிடம் நான் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ராஜவேலுவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். அரசு கொடுத்த ஒரு பவுன் காசுக்காக ஏற்பட்ட பிரச்சனையில் கணவரே 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News