செய்திகள்

ஊட்டியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாய்மாமன் கைது

Published On 2018-12-06 03:58 GMT   |   Update On 2018-12-06 03:58 GMT
ஊட்டியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமனை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊட்டி:

ஊட்டி அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49). இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமியுடன் அவரது தம்பி ரூபேஸ் பாபு(48) என்பவரும் வசித்து வந்தார்.

நேற்று வழக்கம் போல சிறுமி பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் அவர் சோர்வாக விரக்தி அடைந்து காணப்பட்டார்.

இதனை பார்த்த வகுப்பு ஆசிரியை சிறுமியிடம் கேட்டார். அப்போது ஒருவித பயத்துடன் இருந்தார். விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த ஆசிரியை சிறுமியை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் சமூக நல அலுவலர் முன்னிலையில் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிறுமியை அவரது தாய் மாமன் ரூபேஸ் பாபு பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இது குறித்து வகுப்பு ஆசிரியை அளித்த புகாரின் பேரில் ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமன் ரூபேஸ் பாபு, இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் தனலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் 2 பேரையும் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் மினியன் (55). கூலித் தொழிலாளி. இவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில் சிறுமி சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மினியனிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மினியனை குன்னத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News