செய்திகள்

போலீஸ்காரரை கீழே தள்ளிவிட்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2018-11-26 09:47 GMT   |   Update On 2018-11-26 09:47 GMT
போலீஸ்காரரை சாலையில் தள்ளிவிட்டதுடன், போதையில் இருந்ததாக போலியான சான்றிதழ் பெற்றது தொடர்பாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த தர்மன் தனது தாயின் இறுதிச் சடங்குக்கு செல்ல இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் விடுப்பு கேட்டார். அவர் விடுமுறை கொடுக்கவில்லை.

இதனால் கோபம் அடைந்த தர்மன் வாக்கி டாக்கியில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். அவர் குடிபோதையில் பேசியதாக கூறப்பட்டதால் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான தர்மன் தன்னிலை விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த அன்று பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ்காரர் தர்மனை கீழே தள்ளி விபத்தை ஏற்படுத்திய காட்சி பதிவாகி இருந்தது. அதுமட்டுமின்றி கீழே விழுந்த தர்மனை தூக்கி வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி போதையில் இருந்ததாக சான்றிதழ் பெற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் போக்குவரத்து போலீசில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் இன்று இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்தார்.
Tags:    

Similar News