செய்திகள்

பிளஸ் -2 மாணவி மரணம்: காவலில் எடுக்கப்பட்ட வாலிபரை கிராமத்திற்கு அழைத்து வந்து விசாரணை

Published On 2018-11-21 14:12 GMT   |   Update On 2018-11-21 14:12 GMT
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மாணவி இறந்த சம்பவத்தில் கைதான வாலிபரை காவலில் எடுக்கப்பட்டு கிராமத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். #dharmapurigirlstudent #girlmolestation
கம்பைநல்லூர்:

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிணத்தை வாங்க மறுத்து மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் 2 நாள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சிட்லிங் மலைகிராமத்திலும் 24 கிராம மக்கள் உண்ணாவிரதம்- மறியல் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரெண்டு மகேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று கிராம மக்களுடன் பேச்சு நடத்தினார்கள். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

மாணவியின் உடலை சென்னை டாக்டர் மற்றும் தருமபுரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது.

சம்பவம் நடந்த சிட்லிங் கிராமத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. மேலும் மாணவியின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தி.மு.க. மற்றும் இதர கட்சியினரும் நிதி வழங்கினர்.

தற்போது அந்த கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த பாலியல் பலாத்கார கொலை தொடர்பாக சதீஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சேலம் கோர்ட்டில் சரண் அடைந்த வாலிபர் ரமேஷை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

அந்த வாலிபரை நேற்று இரவு சம்பவம் நடந்த சிட்லிங் மலைகிராமத்திற்கு நேரில் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அந்த வாலிபருக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.

3 நாள் விசாரணை முடிந்ததும் நாளை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். #dharmapurigirlstudent #girlmolestation
Tags:    

Similar News