செய்திகள்

திருப்பூரில் போலீசார் மீது கல்வீசி தாக்கிய அசாம் வாலிபர்கள் 10 பேர் கைது

Published On 2018-11-10 14:50 GMT   |   Update On 2018-11-10 14:50 GMT
போலீசாரை கல்வீசி தாக்கிய அசாம் வாலிபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்:

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் (23). இவர் திருப்பூர் நொச்சிப்பாளையத்தில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இதே பனியன் கம்பெனியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மோனலிஷா (21) என்பவரும் வேலை பார்த்து வந்தார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ராகுலுக்கும், மோனலிஷாவுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு மோனலிஷா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் திருப்பூரில் வேலை பார்த்து வரும் மோனலிஷாவின் அண்ணன் யோகி குமார் தனது நண்பர்கள் சாகர், திரிதீப சர்மா,சவுந்த், லட்சந்தா, நபி,சம்போரா, ரீபந்து,ரனவிக் சர்மா, லோகித் ஆகியோருடன் நொச்சிப்பாளையம் வந்தார்.

அவர்கள் ராகுலிடம் தகராறு செய்தனர். இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதி விரைவு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தகராறை விலக்கி விட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அசாம் வாலிபர்கள் 10 பேரும் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மோனலிஷாவின் அண்ணன் யோகிகுமார் உள்பட 10 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், வாலிபர் மீது தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News