செய்திகள்

புதுவை அருகே கடலில் மூழ்கிய பெங்களூர் காதல் ஜோடி பிணம் மீட்பு

Published On 2018-11-07 14:25 GMT   |   Update On 2018-11-07 14:25 GMT
புதுவை அருகே கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெங்களூர் காதல் ஜோடியின் உடல் முத்தியால் பேட்டை சோலை நகர் கடற்கரையில் மீட்கப்பட்டது.
புதுச்சேரி:

டெல்லி செக்கான் விகர்பாலம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ் ரமேஷ் அவஸ்தி. முன்னாள் விமானப்படை அதிகாரி. இவரது மகன் அன்சூல் அஸ்வத். (வயது 20). உத்தரபிரதேசம் பைரேலி இசாட் நகரை சேர்ந்தவர். எனாத்சி வாலியா (20). காதல் ஜோடியான இவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவைக்கு வந்தனர்.

புதுவையில் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று முன்தினம் புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன முதலியார் சாவடி கடற்கரைக்கு வந்தனர்.

அங்கு இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் தங்களது உடமைகளை கடற்கரையில் வைத்து விட்டு இருவரும் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை அவர்களை இழுத்து சென்றது.

இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து இதுபற்றி கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், பலன் கிட்டவில்லை.

இந்த நிலையில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு பலியான இருவர் உடலும் நேற்று இரவு முத்தியால் பேட்டை சோலை நகர் கடற்கரையில் ஒதுங்கியது.

போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலில் மூழ்கி பலியான காதல் ஜோடியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News