ஆம்பூர் அருகே இரு உடல் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மோதகபல்லியை சேர்ந்தவர் உமாபதி(60), விவசாயி. இவர் தனது வீட்டில் 5 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மதியம் ஒரு வெள்ளாடு 2 பெண் குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி சாதாரணமாகவும், மற்றொரு குட்டி ஒரு தலையில் இரு உடல்களுடன், எட்டு கால்களுடனும் பிறந்திருந்தது. இதை அறிந்த அப்பகுதியினர் திரளாக வந்து அந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்த்து சென்றனர்.
ஆனால் பிறந்த சில மணி நேரத்தில் அந்த ஆட்டுக்குட்டி பரிதாபமாக இறந்தது.இறந்த அந்த ஆட்டுக்குட்டியை உமாபதி அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தார்.
பொதுவாக எட்டு கால்களுடன் பிறக்கும் ஆட்டுக்குட்டிக்கு உலக அளவில் ஆக்டா கோட் என்ற பெயரில் அழைக்கப்படுவது வழக்கம்.
கடந்த 2014ம் ஆண்டு குரோஷியா நாட்டில் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவின.
இத்தகைய ஆட்டுக்குட்டிகள் பிறந்து ஒருவாரம் வரை உயிர் வாழ்ந்து விட்டால் பின்னர் தங்களது வாழ்நாளை எளிதாக கழித்து விடும் என்றனர்.