செய்திகள்
டிரைவர் ராம்குமார்

அதிகாரிகள் டார்ச்சரால் போக்குவரத்துக்கழக வளாகத்தில் வி‌ஷம் குடித்த டிரைவர்

Published On 2018-10-24 05:37 GMT   |   Update On 2018-10-24 05:37 GMT
அதிகாரிகள் டார்ச்சரால் அரசு போக்குவரத்துக் கழக வளாகத்தில் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). இவர் திண்டுக்கல்லில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். திண்டுக்கல் - சென்னை வழித்தடத்தில் ஓட்டுனராக இருந்து வருகிறார்.

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஒரு வாரம் ஓய்வு இல்லாமல் பணியில் இருந்து வந்த ராம்குமாருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் தனக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு ராம்குமார் கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் விடுப்பு அளிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் நேற்று போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகத்துக்கு வந்த ராம்குமார் தான் கொண்டு வந்திருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ராம்குமார் கூறுகையில், கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை திண்டுக்கல் - திருச்சி வழித்தடத்தில் பஸ்சை ஓட்டி வந்தேன். 21-ந் தேதி ஓய்வும், 22-ந் தேதி வார விடுமுறையும் தர வேண்டும். இது குறித்து நான் கேட்டபோது அதற்கு மறுத்து தொடர்ந்து பணிக்கு வருமாறு வற்புறுத்தினர். இதனால் மன வேதனையடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என்றார். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் டிரைவர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News